Published : 21 May 2020 01:26 PM
Last Updated : 21 May 2020 01:26 PM

தூத்துக்குடி அருகே பாஞ்சாலங்குறிச்சியில் தாய், மகள் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வியாபாரியின், மனைவி மகன், மகள் ஆகியோருக்கு இன்று காலை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர் குடியிருப்பை சேர்ந்த 47 வயதுடையவர், சென்னை கோயம்பேடு சந்தையில் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், கடந்த 15-ம் தேதி சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, 16-ம் தேதி காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து விபரத்தை கூறினார்.

உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுத்தனர். பின்னர் அவரை பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், 19-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில், வியாபாரியின் மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று காலை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து வருவாய்த் துறையினர் சுகாதாரத் துறையினர் அங்கு சென்று 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வசித்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x