Published : 19 May 2020 08:49 AM
Last Updated : 19 May 2020 08:49 AM

டாஸ்மாக் கடைகளில் விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு: டோக்கன்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பு

டாஸ்மாக் கடைகளில் விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளொன்றுக்கு ஒரு கடையில் மதுபிரியர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் எண்ணிக்கையும் 500-ல் இருந்து 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை விதித்ததைத் தொடர்ந்து சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அன்றைய தினம் ரூ.163 கோடி, 2-வது நாளில் ரூ.133 கோடி என மொத்தம் ரூ.296 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தன. தமிழகம் முழுவதும் நேற்றும் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கினர்.

இந்நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் விற்பனை நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீடித்து. இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார். இந்த திடீர் உத்தரவு கடை பணியாளர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. இதனால், பணியாளர்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.

சில இடங்களில் மாலை 5 மணிக்கு கடையை மூடிவிட்டு பணியாளர்கள் கிளம்பினர். பின்னர், மாவட்ட மேலாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு கடையை மீண்டும் திறந்து வைத்து விற்பனையில் ஈடுபட்டனர்.

மேலும், நாளொன்றுக்கு ஒரு கடையில் வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையும் 500-ல் இருந்து 750 ஆக அதிகரித்து விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை டாஸ்மாக் கடைகளுக்கு வந்த மதுபிரியர்களுக்கு கூடுதலாக 250 டோக்கன்களை வழங்கி மது விற்பனையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x