Published : 18 May 2020 05:19 PM
Last Updated : 18 May 2020 05:19 PM

மத வழிப்பாட்டுத்தலங்களை திறக்கக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்ததை ஏற்று வழிபாட்டுத்தலங்களை திறக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23- ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4-ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அவரது மனுவில், “மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை. மத வழிபாட்டுத் தலங்களை ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியவில்லை. முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்கு சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருக்கின்றனர். என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் 15-ம் தேதிக்குப்பிற்கு இதுகுறித்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டம் அதிக அளவில் வரும், அவற்றை கட்டுப்படுத்த முடியாது ,சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை” என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசு மத வழிபாட்டுக்குரிய திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x