Published : 13 May 2020 04:50 PM
Last Updated : 13 May 2020 04:50 PM

மருத்துவர் உடலை மறு அடக்கம் செய்ய மாநகராட்சி மறுப்பு: உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவிடக் கோரி அவரது மனைவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை, ஏப்ரல் 20-ம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மற்றும் வேலங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததற்கு மருத்துவக் கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்தனர்.

இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட தனது கணவர் சைமனின் உடலை அவரது கடைசி விருப்பப்படி தங்கள் மதம் சார்ந்த கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி முதல்வர் பழனிசாமிக்குக் காணொலி மூலம் கோரிக்கை வைத்தார்.

இதே கோரிக்கையை சென்னை மாநகராட்சியிடமும் கோரிக்கை மனுவாக அளித்தார். அதைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து மே 2-ம் தேதி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டனர். அவ்வாறு தோண்டி எடுத்து மீண்டும் புதைப்பது தொற்று நோய் பரவக் காரணமாக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ''கணவரின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனது கோரிக்கையை நிராகரித்த சென்னை மாநகராட்சி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் ஆனந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரவிக்குமார் பால் மற்றும் ரவிக்குமார் ஆகியோரும், தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.கதிர்வேலுவும், சென்னை மாநகராட்சி தரப்பில் அரசு வழக்கறிஞர் கார்த்திகா அசோக்கும் ஆஜராகி வாதிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x