Published : 13 May 2020 12:36 PM
Last Updated : 13 May 2020 12:36 PM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போன நிலையில், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், "பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுதத் துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள் ஊரடங்கு நேரத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர். மாணவர்களின் பெற்றோரும் தவியாய்த் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தேன்.

எனது அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதல்வரிடம் கலந்து முடிவு எடுப்போம் என்று பதில் அளித்தார்.

இதனிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். தற்போது, ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?

இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x