Published : 13 May 2020 07:21 AM
Last Updated : 13 May 2020 07:21 AM

சிறப்பு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள்

திருப்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக, பிஹார் மாநிலம் ஹாஜ்பூர் நகருக்கு 1,464 தொழிலாளர்கள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்னதாக, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் உள்ளிட்டோர், அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல, வட மாநிலத் தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 720 பேர் பேருந்து மூலமாகவும், 2 சிறப்பு ரயில்கள் மூலமாக 2,704 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்" என்றார்.

கோவை

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களில், பிஹார் மாநிலம் முஷாபர்பூருக்கு 1,318 பேர், ஒடிசா மாநிலத்துக்கு 1,464 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 1,464 தொழிலாளர்கள் நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து 3 சிறப்பு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, சமூக இடைவெளி யின்றி பேருந்துகளிலும், சரக்கு வாகனங்களிலும் நெருக்கமாக அமரவைக்கப்பட்டு, ரயில் நிலையத்துக்கு தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். அரசிடம் முன்பதிவு செய்யாத சில தொழிலாளர்களும், தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து நடந்தே ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x