Published : 09 May 2020 09:00 PM
Last Updated : 09 May 2020 09:00 PM
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சமூக ஆர்வலர் என்கிற முறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அதில், மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் கணேசன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து மகாராஷ்டிரா சென்றவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முயலுகையில், தமிழகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அனைவரும் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டுமென மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அங்கிருப்பவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT