Published : 07 May 2020 04:27 PM
Last Updated : 07 May 2020 04:27 PM

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு; இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல்- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறும்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் படித்துவிட்டு அரசுப்பணியை எதிர்நோக்கி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கும் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியாகும்.

இதே போல், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்று, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் அரசுத்துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தி உள்ளது என்பது, இந்த ஆண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்கள் கொடுப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இது முழுக்க முழுக்க தமிழக அரசு தனது சுயநலத்துக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை. இந்த முடிவு தற்போது பணியில் உள்ள பலரது பதவி உயர்வு வாய்ப்பையும் பாதிக்கும்.

எனவே, தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் நலன் கருதி இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநிலம் முழுவதும் அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களையும், ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x