Last Updated : 04 May, 2020 12:07 PM

 

Published : 04 May 2020 12:07 PM
Last Updated : 04 May 2020 12:07 PM

புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று; சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது விழுப்புரம்

திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக, 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது.

கரோனா தொற்றால் நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணமடைந்த 27 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, செஞ்சி, கப்பியாம்புலியூர், அரசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெளிமாவட்டங்களில் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வந்த சுமார் 400 பேர் கரோனா பரிசோதனைக்காக தங்கவைக்கப்பட்டு அவர்களிடம் பரிசோதனை நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "கடந்த 2 நாட்களில் 400 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் வெளிமாவட்டங்கள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வந்த 2 குழந்தைகள் உட்பட 86 பேர் நேற்று வரை விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட 21 கிராமங்களுக்குச் சேவையாற்ற அமைக்கப்பட்ட வங்கிகள், மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று மாலை எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவித்த ஆரஞ்சு மண்டலத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்கு நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x