Published : 02 May 2020 01:13 PM
Last Updated : 02 May 2020 01:13 PM

ஓசூரில் விவசாயத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 8 டன் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

ஓசூர் பேளகொண்டப்பள்ளி தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகள்.

ஓசூர்

ஓசூர் அருகே விவசாயப் பண்ணைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வினய்ரெட்டி என்பவருக்குச் சொந்தமாக விவசாயப் பண்ணைத் தோட்டம் உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திகிரி காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி சங்கு உத்தரவின் பேரில் மத்திகிரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பேளகொண்டப்பள்ளி பண்ணைத் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பண்ணை வீட்டை அடுத்துள்ள வீட்டில் 260 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 8 டன் எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குட்கா மூட்டைகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த தினேஷ்பாபு மற்றும் குட்கா மூட்டைகளைப் பதுக்கி வைக்க இடமளித்த விவசாயப் பண்ணைத் தோட்ட உரிமையாளர் வினய் ரெட்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதில் தலைமறைவான தினேஷ்பாபுவின் அண்ணன் மாதவனைப் போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மத்திகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x