Published : 29 Apr 2020 09:39 PM
Last Updated : 29 Apr 2020 09:39 PM

வீட்டு உபயோகப் பொருட்கள், ஏசி, ஃபிரிட்ஜ் கடை, சர்வீஸ் சென்டரை திறக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனைக் கடைகளையும், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கும், சாதாரண குடிமகனுக்கும் அத்தியாவசியத் தேவையான ஏ.சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையகங்களையும், ரிப்பேர் செய்யும் கடைகளையும் திறக்கக் கோரி வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பாதுகாக்க ஃபிரிட்ஜ் அத்தியாவசியமாகிறது எனவும், பொதுமக்களின் அன்றாடத் தேவையான இந்த வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்தால், அதைச் சரிசெய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் திரு எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டர்களை மட்டுமாவது திறக்க முடியுமா? என்று பாருங்கள் என்று அரசுக்குத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x