Last Updated : 29 Apr, 2020 03:00 PM

 

Published : 29 Apr 2020 03:00 PM
Last Updated : 29 Apr 2020 03:00 PM

புதுச்சேரி உழவர் சந்தையில் விஷக்குளவி கொட்டியதில் 12 பேர் காயம்; மருத்துவமனையில் அனுமதி: உழவர் சந்தை மூடல்

புதுச்சேரி உழவர் சந்தைக்கு வந்தவர்களை விஷக்குளவி கொட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கடை அமைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

இந்நிலையில், இன்று(ஏப் 29) காலை அங்கு வழக்கம் போல் விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பொதுமக்களும் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அப்போது உழவர் சந்தையை ஒட்டியுள்ள தாவரவியல் பூங்காவில் இருந்து திடீரென படையெடுத்து வந்த விஷக் குளவிகள் காய்கறி வாங்க வருபவர்களை விரட்டி விரட்டிக் கொட்டின.

இதன் காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டனர். மயக்கம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதில் 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் நாராயணசாமி, அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். குளவி கொட்டியதைத் தொடர்ந்து உழவர் சந்தையும் மூடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x