Published : 27 Apr 2020 10:30 PM
Last Updated : 27 Apr 2020 10:30 PM
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையை மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.
கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், அதிக அளவில் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், ''விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் போது, கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலித்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. காணொலி மூலம் நடந்த இந்த விசாரணையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், சுங்கக் கட்டணம் வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கடமை. மேலும், இது சம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அந்த மனுவை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT