Last Updated : 27 Apr, 2020 12:58 PM

 

Published : 27 Apr 2020 12:58 PM
Last Updated : 27 Apr 2020 12:58 PM

எஸ்.ஐ., காவலருக்கு கரோனா தொற்று: மதுரை தெற்குவாசல் காவல் நிலையம் மூடல்

மதுரையில் காவல்துறையைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தெற்குவாசல் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தெற்குவாசல் காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவு என, சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிக்கின்றனர். இவர்களில் சிலர் கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையொட்டி, அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.

இதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு முதற்கட்டமாக 25 போலீஸாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எஸ்.ஐ ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து, தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் மேலும் 23 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு வரவில்லை.

இந்நிலையில் தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 15 பேருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காவல்நிலை யத்தை தற்காலிகமாக மூடி, கிருமிநாசினி தெளிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அருகிலுள்ள போக்குவரத்து புறக்காவல் நிலையத்தில் ஷெட் அமைத்து, தற்காலிகமாக அங்கு காவல் நிலையம் செயல்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின், மீண்டும் காவல் நிலையம் அதே இடத்தில் செயல்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.

இதேபோல், பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பணிபுரிந்த போக்குவரத்து காவலர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x