Last Updated : 26 Apr, 2020 01:31 PM

 

Published : 26 Apr 2020 01:31 PM
Last Updated : 26 Apr 2020 01:31 PM

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை மாநகரம்: புறநகரிலும் கடைகள் இல்லாததால் மக்கள் அவதி

மதுரை- திண்டுக்கல் பைபாஸ் சாலை.

மதுரை

கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலானதால் மதுரை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன. முழு ஊரடங்கு இல்லாத புறநகர்ப் பகுதிகளிலும் காய்கறி, மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் அத்தியவாசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுரை, சென்னை, கோவை மாநகராட்சி எல்லையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை இரவு 9 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த 4 நாளும் மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர்த்து காய்கறி, மளிகைக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டதால் நேற்று மதுரையில் காய்கறி, மளிகைக் கடைகளில் மக்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு சமூக விலகலைப் பின்பற்றாமல் பொருட்களை வாங்கிக் குவித்தனர். இதனால் பல இடங்களில் மளிகைப் பொருட்கள், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநகராட்சியின் நூறு வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக, காய்கறி மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டன. காய்கறி, இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டன.

இருப்பினும் மாநகராட்சி சார்பில் 55 வாகனங்களில் 16 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கும், 6 பழங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கும் விற்கப்பட்டது. அரசுத் துறை பணியாளர்கள், அத்தியவாசியப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இரு சக்கர வாகனங்களின் நடமாட்டம் சுத்தமாகக் குறைந்திருந்தது. இதனால் மதுரை மாநகராட்சி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. 800க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.

புறுநகர் மக்கள் அவதி
மதுரை மாநகராட்சிப் பகுதியில் தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காய்கறி, மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் புறநகர் மக்கள் பால், காய்கறி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x