Published : 25 Apr 2020 08:12 PM
Last Updated : 25 Apr 2020 08:12 PM

சென்னையில் கரோனா அதிக பரவல் ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கரோனா தொற்று தமிழகம் முழுதும் பரவி வரும் நிலையில் சென்னையில் மட்டும் அதிக அளவில் கரோனா தொற்று ஏன் அதிகரித்து வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜய்பாஸ்கர் விளக்கம் அளித்தார்.

சென்னையில் காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

“மத்திய அரசின் நிபுணர் குழுவினர் இன்று தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் சென்னையில் பல இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். சிகிச்சை முறை, தனிமைப்படுத்துதல் இடம், வெளிமாநில தொழிலாளர்கள் வைக்கப்பட்டுள்ள இடம், ஆய்வகங்கள், மருத்துவமனைகளை ஆய்வுகள் செய்துவிட்டு கருத்துகளை தெரிவிப்பார்கள்.

சென்னையில் மக்கள் தொகை அதிகம், சென்னையைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்து ஒன்றரைக்கோடி பேர் மக்கள் தொகை உள்ளது. நோயின் பரவல் அதிகம் என்பதால் சென்னையில் நோயைக்கட்டுபடுத்துவது சவாலான வேலைதான்.

அதனால்தான் முதல்வர் நேரடியாக இதை கண்காணித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் மருத்துவ வல்லுனர்கள் குழு அமைத்து அதன் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 4 நாட்கள் முழு ஊரடங்கு எனும் போது அதன் தொடர்பு செயினை தகர்க்கச் செய்து பரவுதலை தடுக்க முடியும். அதனால் பொதுமக்கள் இதிலுள்ள சிரமங்களை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

ரேபிட் டெஸ்ட் கருவி சோதனையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்தே பிசிஆர் டெஸ்ட் குறித்து சொல்கிறோம். அது ஆதாரபூர்வமான சோதனை இதில் ஆரம்பத்தில் 200 என்கிற அளவில் ஆரம்பித்து இன்று 7000 என்கிற அளவிற்கு சோதனை ஒரு நாளைக்கு எடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். இது கூடியவிரைவில் 10000 என்கிற எண்ணிக்கையாக உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்புப் பணியில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம்., இதற்காக ஆரோக்கியம் எனும் திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார்.

அதன் முதற்கட்டமாக கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் கொடுக்க சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இவைகள் அவர்களது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். இது தவிர ஜிங்க் பிளஸ் விட்டமின் சி, ஹைட்ராக்சி குளோரைன் போன்றவைகள் கொடுக்கிறோம்.

கபசுர குடிநீருக்காக 3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. டாம்காஃப் மூலமாக அது தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

தர்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தைக்கு கரோனா தொற்று வராமல் பார்த்துக்கொண்டோம்.

தஞ்சையில் ஒரு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. தாய் குணமடையாமல் சிகிச்சையில் இருக்கிறார். 960 பேர் வீட்டுக்கு திரும்பினாலும் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்”.

இவ்வாறு அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x