Published : 25 Apr 2020 12:05 PM
Last Updated : 25 Apr 2020 12:05 PM

விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரம் வழங்கிடுக: தினகரன்

விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரமாவது தடையின்றி வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விவசாயப் பணிகளைச் செய்யத் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விவசாய மின்மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிக்கையில், "விவசாயப் பணிகளைச் செய்யத் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும், விவசாய மின் மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் வருகின்றன. இதனால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரமாவது தடையின்றி வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விவசாயப் பணிகளுக்கான விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x