Last Updated : 22 Apr, 2020 06:36 PM

 

Published : 22 Apr 2020 06:36 PM
Last Updated : 22 Apr 2020 06:36 PM

இலங்கையில் இருந்து வந்த 65 பேரும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

இலங்கையில் இருந்து வந்த 65 பேரும் குடியுரிமை கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2009-ல் தாக்கல் செய் மனுவின் விவரம்:

''நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எங்கள் மூதாதையர்கள் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் பிழைப்புக்காக இலங்கை சென்றனர். அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தோம். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் மூண்டதால் உயிருக்குப் பயந்து தமிழகம் வந்தோம்.

உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். இலங்கை குடியுரிமை கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு குடியுரிமைச் சான்று வழங்கவில்லை. எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில், ''மனுதாரர்கள் 1983 முதல் 1985 வரை இந்தியா வந்தவர்கள். தமிழகம் வந்த இலங்கை அகதிகள் கொட்டப்பட்டு, மதுரை, பெரம்பலூர், கரூர், மண்டபத்தில் உள்ளனர். மனுதாரர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் பொருட்கள், தங்கும் இடம், உடை, இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இவர்களை அகதிகளாகவே கருதுகிறோம். இந்தியக் குடியுரிமையைப் பொறுத்தவரை மத்திய அரசின் கொள்கை முடிவு. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் அல்ல.

மனுதாரர்கள் தமிழகத்தில் நிரந்தர வசிப்பிடம், நீண்ட நாள் விசா இல்லை, சட்டபூர்வ பாஸ்போர்ட்டில் இந்தியா வரவில்லை. இதனால் இவர்கள் குடியுரிமை கோர முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில், ''இந்தியாவிற்கு 1983-க்கு பிறகு இலங்கையில் இருந்து சட்டபூர்வமான பயண ஆவணங்களுடன் வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவர். இவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள்.

மேலும் மனுதாரர்களின் இந்தியக் குடியுரிமை சான்று கேட்டு அனுப்பிய விண்ணப்பம் மத்திய அரசுக்கு வரவில்லை. மனுதாரர்கள் அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும் இந்தியக் குடியுரிமையை தங்களின் உரிமையாக கோர முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரர்களின் நிலை திரிசங்க சொர்க்கமாக உள்ளது. இவர்கள் நிலையைப் பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித்துறையின் லட்சுமண ரேகையைத் தாண்ட முடியாது. குடியுரிமை வழங்குவது மத்திய அரசு சார்ந்தது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

இதனால் மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தாமதம் இன்றி அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மனுதாரர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது மனுதாரர்கள் உயிருக்குப் பயந்து இந்தியா வந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாவுக்காக காத்திருக்க முடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரர்களின் விண்ணப்பம் மீது மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x