Published : 19 Apr 2020 10:26 AM
Last Updated : 19 Apr 2020 10:26 AM

நிவாரண உதவிப் பொருட்கள் வழங்க 48 மணிநேரத்திற்கு முன்பு மண்டல அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; சென்னை மாநகராட்சியின் 10 கட்டுப்பாடுகள்  

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை

நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.19) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் மற்றும் கடைகள் தவிர்த்து பிற நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளிமாநிலம் மற்றும் வெளியூரை சேர்ந்த சுமார் 6,000 நபர்கள் மாநகராட்சியின் காப்பகங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள்,கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் என 96 மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு போன்ற அடிப்படை ரேஷன் பொருட்கள் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று மாநகராட்சி அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி உள்ள தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அவ்வாறு உதவிகள் வழங்கும் போது கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது.

எனவே, உணவு பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிக்காட்டுதல்களை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

அதன்படி, தனியார் அமைப்பு, அரசு சாரா அமைப்புகள் அல்லது குழுவினர் ஏழை, எளியவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் விநியோகம் செய்ய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

2. உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

3. மண்டல அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.

4. எந்த மண்டலத்திற்குட்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ அந்த மண்டல எல்லைக்குட்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.

5. அரசால் தடை செய்யப்பட்ட பகுதி (Containment Zone) என அறிவிக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட இடத்தில் உணவு வழங்கக்கூடாது.

6. தயாரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.

7. உணவு வழங்குமிடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி/ தன்னார்வ அமைப்பு/அரசு சாரா அமைப்புகள்/குழுவினர் உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

8. உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில், மூன்று நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.

9. உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

10. மேற்கண்ட நிபந்தனைகளுடன் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உணவு வழங்கப்பட வேண்டும்.

இவை தவிர, அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x