Last Updated : 13 Apr, 2020 11:18 AM

 

Published : 13 Apr 2020 11:18 AM
Last Updated : 13 Apr 2020 11:18 AM

கரோனா பாதிப்பால் கொள்முதல் நிறுத்தம்: மதுரையில் மலைபோல் குவிந்துள்ள நெல்

கரோனா பாதிப்பால் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவரப்பட்ட நெல் வெட்டவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதால் வெயில், மழையால் சேதமடைந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகங்கள் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தடைபட்டுள்ளது.

செல்லம்பட்டி ஒன்றியம் கோ.வடிகபட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொள்முதலுக்காக நெல் கொண்டு வருவது வழக்கம்.

இவ்வாறு கொள்முதலுக்காகக் கொண்டு வரப்பட்ட 12 ஆயிரம் சிப்பம் (ஒரு சிப்பம் 25 கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிலையத்தின் அருகே ஒரு மாதமாக திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பிறகே நெல் கொள்முதல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரும்ப எடுத்துச் சென்றால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வடிகபட்டியைச் சேர்ந்த செல்வம் கூறுகையில், "கடந்த ஆண்டு 50 ஆயிரம் சிப்பம் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு இதுவரை 15 ஆயிரம் சிப்பம் மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர்.

3 ஆயிரம் சிப்பம் கொள்முதல் செய்த நிலையில் இந்த 12 ஆயிரம் சிப்பத்தை கரோனா பாதிப்பை சொல்லி கொள்முதல் செய்யாமல்விட்டுள்ளனர். இதனால் மழை, வெயிலால் நெல் சேதமடைந்து வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x