Last Updated : 11 Apr, 2020 11:27 AM

 

Published : 11 Apr 2020 11:27 AM
Last Updated : 11 Apr 2020 11:27 AM

தூத்துக்குடியில் கரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடல் 15 அடி ஆழத்தில் புதைப்பு: உறவினர்கள் இருந்தும் யாரும் வராத பரிதாபம்

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு தூத்துக்குடியில் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி போல்டன்புரம், ராமசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டத்தில் கயத்தாறு, ஆத்தூர், காயல்பட்டினம், பேட்மாநகரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளிருந்து ஆட்கள் வெளியே செல்வதற்கும், வெளியாட்கள் உள்ளே வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மூதாட்டியின் மகன் கப்பல் சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மருமகள் தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அந்த மூதாட்டியின், மகன்-மருமகள் உள்பட ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இதையடுத்து, அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தூத்துக்குடி நகர போலீஸ் துணை எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் மூதாட்டியின் உடல் சிதம்பர நகர் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையிலான மாநகராட்சி சுகாதார குழுவினர் அந்த மூதாட்டியின் உடலை 15 அடி ஆழத்தில் வைத்து புதைத்தனர். தகனக்குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கும் கிருமிநாசினி கலவை தூவப்பட்டு அந்த மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்டோர் முழுஉடல் கவச உடையினை அணிந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோயால் பலியான மூதாட்டிக்கு தூத்துக்குடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கரோனா பயம் காரணமாக அவரின் உடல் தகனத்தில் உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x