Last Updated : 10 Apr, 2020 12:58 PM

 

Published : 10 Apr 2020 12:58 PM
Last Updated : 10 Apr 2020 12:58 PM

உண்டியலில் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பள்ளிச் சிறுமிகள்

பள்ளிச் சிறுமிகள் மாவட்ட ஆட்சியர் அருணைச் சந்தித்து உண்டியலில் சேமித்த தொகையை அளித்தனர்.

புதுச்சேரி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக உண்டியலில் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பள்ளிச் சிறுமிகள் இருவர் அளித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தடுப்புக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்ய புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 'கோவிட்-19 நிவாரண நிதி புதுச்சேரி' என்ற பெயரில் தனிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், கரோனா தொற்று தடுப்புக்கு நிதி தர வேண்டும், புதுச்சேரி எம்எல்ஏக்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும், எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 சதவீதத்தையும் கொடுத்து வருகிறார்கள். மேலும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நிதி அளித்து வருகின்றனர். இதுவரையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

"கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக நீக்குவதற்கு இந்த நிதி மட்டும் போதாது. மத்திய அரசு நிதி வழங்காத காரணத்தாலும், மாநில அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாலும் இந்த நிதி வெகுவாக நமக்குப் பயன்படும்.

எனவே, பொதுமக்கள், வசதி உள்ளவர்கள், தொழிலதிபர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிகப்படியான நிதியை வழங்க வேண்டும்" என்று முதல்வர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சாரம் சக்தி நகரை சேர்ந்த துணிகள் அயர்ன் செய்யும் வேலை செய்து வரும் சந்திரன் என்பவரின் மகள்களான 9-ம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியா, 2-ம் வகுப்பு படிக்கும் மோகனப்பிரியா ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுக்க விரும்புவதாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் தொகையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அவர்களைப் பாராட்டிய ஆட்சியர், சிறுமிகள் அளித்த உண்டியலை முதல்வர் நாராயணசாமியிடம் நேற்று (ஏப் 9) ஒப்படைத்தார். சிறு வயதிலேயே பிறருக்கு உதவிடும் அந்தச் சிறுமிகளின் குணத்தையும், பிறருக்கு முன்னுதாரணமாக விளங்குவதையும் வெகுவாகப் பாராட்டிய முதல்வர் சிறுமிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து சிறுமிகளிடம் கேட்டபோது, "கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் இறந்துள்ளனர் என்றெல்லாம் செய்திகளில் படித்தோம். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கிறது. புதுச்சேரியிலும் கரோனா தொற்று உள்ளது.

இதற்கு மருந்துவ உபகரணங்கள் வாங்கவும், வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவவும் நிதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். எனவே, கரோனா பாதிப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்தோம்" என்று தெரிவித்தனர்.

சிறுமிகள் கவிப்பிரியா, மோகனப்பிரியா இருவரும் ஏற்கெனவே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரம் தொகையை நிவாரணமாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x