Published : 09 Apr 2020 08:20 PM
Last Updated : 09 Apr 2020 08:20 PM
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியைக் குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக் குழுவை அமைத்து முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்துப் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர். புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளைச் சிறைகள் தனிச் சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை. சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
கரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில் தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோ கால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.
தமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT