Published : 03 Apr 2020 07:37 AM
Last Updated : 03 Apr 2020 07:37 AM

விற்பனைக்கு கொண்டுசெல்ல வழியில்லாததால் மரங்களில் பழுத்து அழுகி வீணாகும் பலாப்பழங்கள்- அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விற்பனைக்கு கொண்டு செல்ல வழியில்லா ததால் புதுக்கோட்டை மாவட் டத்தில் பலாப்பழங்கள் மரத்தி லேயே பழுத்து அழுகி வீணாகி வருகின்றன.

ருசி அதிகம் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப்பழங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கும். சீசனின்போது தினமும் தலா 100 டன் பலாப்பழங்கள் வெளிமாநிலங் களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் பலருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துவந்தது.

இந்நிலையில், 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, ஏனைய கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பலாப்பழங்களை விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப் பட்டுள்ளதால், பழங்களைப் பறித்தாலும் விற்க முடியாது என்ற நிலையில் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

விற்பனைக்கு கொண்டு செல்ல வழியில்லாததால் பழங் கள் மரத்திலேயே அழுகி வீணாகி வருகின்றன. எனவே, பாதுகாப்பான வகையில் பலாப்பழங்களை விற்பனை செய்வதற்கும், விற்பனைக்கு பழங்களை வாகனங்களில் கொண்டு செல்லவும் அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வடகாட்டைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் கூறியது:

மாவட்டத்தில் 10,000 ஏக்கரில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கஜா புயலின்போது பெரும்பகுதி அழிந்ததால் கடந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டது.

நிகழாண்டு, குறைந்த அளவே விளைந்திருந்தாலும் அவற்றை மே மாதத்துக்குள் விற்றால் தான் ஓரளவுக்கு லாபம் கிடைக் கும். அதன் பிறகு விலை வீழ்ச்சி யடைந்துவிடும் என்பதால் லாபம் இருக்காது.

தற்போது 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் இயங்காததாலும், கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் பலாப்பழங்களை விவசாயிகளால் விற்பனை செய்யமுடியவில்லை.

இருப்பு வைத்து விற்க முடியாது என்பதால், பலாப்பழ மண்டிகளை திறக்கவும், விற்பனை செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x