Published : 01 Apr 2020 02:40 PM
Last Updated : 01 Apr 2020 02:40 PM

144 தடை மீறல்; சென்னையில் வாகன ஓட்டிகள் மீதான வழக்கு அதிகரிப்பு; 24 மணிநேரத்தில் 2,658 வழக்குகள்: 1,488 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் நேற்று காலை 6 மணியிலிருந்து 24 மணிநேரத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாரால் 2,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,488 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 144 தடை உத்தரவை அமல்படுத்த போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸாரின் கடும் நடவடிக்கை காரணமாக தினமும் நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம், 188 ஐபிசி பிரிவுகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீஸாரின் தொடர் நடவடிக்கை இருந்தாலும் காரணமின்றி ஊர் சுற்றி சமூக விலகலைப் புறக்கணிக்கும் நபர்களை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர். சென்னையில் ஒரே நாளில் மார்ச் 31-ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில் 2,658 வழக்குகள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாரால் போடப்பட்டு 1,488 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்த விவரம்:

“கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி. பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144-ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 சிஆர்பிசி-ஐ நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 161 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (31.03.2020) காலை 6 மணி முதல் இன்று (01.4.2020) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 499 இருசக்கர வாகனங்கள், 41 இலகு ரக வாகனங்கள் மற்றும் 15 ஆட்டோக்கள் என மொத்தம் 555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 965 வழக்குகள், இதர போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 635 வழக்குகள் உட்பட 1,693 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 933 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் பணிகள் தொடரும். அத்தியாவசியத் தேவைகள் இன்றி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும்”.

இவ்வாறு சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x