Published : 23 Mar 2020 06:50 AM
Last Updated : 23 Mar 2020 06:50 AM

மார்ச் 31-ம் தேதி வரை ரிச்சி தெருவிலும் கடைகளை மூடுவதற்கு மாநகராட்சி முடிவு

மக்கள் ஊரடங்கு காரணமாக அண்ணாசாலை, ரிச்சி தெருவில் நேற்று மூடப்பட்டிருந்த கடைகள்.

சென்னை

தியாகராய நகர் ரங்கநாதன் தெருவைப் போல ரிச்சி தெருவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அத்தெருவில் உள்ள கடைகளையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையின் முக்கிய வர்த்தக மையமாக தியாகராய நகர் ரங்கநாதன் தெரு உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அங்குள்ள கடைகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக ரங்கநாதன் தெரு உள்ளது.

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தமிழகத்திலுள்ள வணிக வளாகங்கள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி என்பதால், சென்னை ரங்கநாதன் தெருவில் வணிக வளாகங்கள் மட்டுமல்லாது சிறு கடைகள் அனைத்தையும் மாநகராட்சி மூடியது.

இந்நிலையில் அப்பகுதி வணிகர் சங்கங்கள், ரிச்சி தெரு, என்எஸ்சி போஸ் சாலை, காசி செட்டி தெரு, கோவிந்தப்பநாய்க்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அங்குள்ள கடைகளை எல்லாம் மாநகராட்சி மூடவில்லை என குற்றம்சாட்டி வந்தனர்.

சங்கங்கள் முடிவு

இந்நிலையில், மின்னணு பொருட்கள் வர்த்தக மையமாக விளங்கும் ரிச்சி தெருவில் உள்ள கடைகளையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கிடையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்கள் மட்டும் கடைகளை மூடுவது என ரிச்சி தெருவில் கடை வைத்திருப்போர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதுள்ள சூழலில் கரோனா காய்ச்சல் பரவுவதற்கான சிறு வழிகளையும் அடைக்கும் நிலையில் மாநகராட்சி உள்ளது. ரங்கநாதன் தெருவைப் போல ரிச்சி தெருவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அங்குள்ள மொத்த வியாபார கடைகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

அதனால் அங்குள்ள கடை களையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x