Published : 13 Mar 2020 09:33 AM
Last Updated : 13 Mar 2020 09:33 AM

விஜய் வீட்டில் அதிகாரிகள் மீண்டும் சோதனை- வரி மோசடி செய்யவில்லை என தகவல்

‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள், பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

இதன் பிறகு, விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பியது. விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் ஆஜரானார். மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நகர் காலனியில் வசிக்கும் ‘மாஸ்டர்’ பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி ஆய்வு செய்தனர். ‘பிகில்’ பட விவகாரத்தில் நடந்தசோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், லலித்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கேட்டபோது, வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

விஜய் வீட்டில் ஏற்கெனவே நடந்த சோதனையின்போது கிடைத்த ஏராளமான ஆவணங்களை அவரது வீட்டிலேயே ஓர் அறையில் வைத்து, அந்த அறைக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த அறைக்கு விஜய், குடும்பத்தினர், பணியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

விஜய் வீட்டுக்கு நேற்று சென்றவருமானவரித் துறை அதிகாரிகள்,அந்த அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி, ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்தனர்.லலித்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அடிப்படையிலும் விஜய் வீட்டில் சோதனைநடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த சோதனை நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘பிகில்’ படத்துக்கு ரூ.50 கோடியும், ‘மாஸ்டர்’ படத்துக்கு ரூ.80 கோடியும் சம்பளம் வாங்கிய அவர், வருமான வரிகளைசெலுத்தி உள்ளார். சோதனையில் இந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர் வரி மோசடி எதுவும் செய்யவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x