அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை தனித்தனி கவரில் வழங்கக் கோரி வழக்கு: தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை தனித்தனி கவரில் வழங்கக் கோரி வழக்கு: தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை அவற்றை சாப்பிடும் வேளையை குறிப்பிட்டு தனித்தனி கவரில் வழங்கக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ராஜு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள் காலை, மதியம் மற்றும் இரவில் சாப்பிட வேண்டிய மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுக்கின்றனர்.

அந்த மருந்து சீட்டுடன் மருந்து வாங்கச் சென்றால் அனைத்து மாத்திரைகளையும் ஒரே கவரில் போட்டு கொடுக்கின்றனர். அதில் எந்த மாத்திரை, மருந்தை காலை, மதியம் மற்றும் இரவில் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து கொடுப்பதில்லை.

இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிட முடியாத நிலை உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து சாப்பிடாவிட்டால் நோய் குணமாக வாய்ப்பில்லை.

இது குறித்து கேட்டபோது மாத்திரகளை தனித்தனி கவரில் வழங்க தேவையான கவரை அச்சிட ஆண்டுக்கு ரூ.6 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி சுகாதாரமான வாழ்வை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எனவே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை அவற்றை சாப்பிடும் வேளைகளை குறிப்பிட்டு தனித்தனி கவரில் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in