Published : 12 Mar 2020 12:16 PM
Last Updated : 12 Mar 2020 12:16 PM

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது; ஏமாற்றம் என்ன?- ரஜினி பதில்

செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி | படம்: ம.பிரபு

சென்னை

நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்பதை நிர்வாகிகள் ஏற்காததுதான் ஏமாற்றம் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வாய்ப்பு, ஆட்சித் தலைமை வேறு; கட்சித் தலைமை வேறு என 3 முக்கிய திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் முதல்வராக இருக்க மாட்டேன். கட்சித் தலைவராக இருப்பேன்.

தேர்தல் நெருங்க நெருங்க என்னுடைய 3 திட்டங்களை இளைஞர்கள், எனக்குத் தெரிந்த நீதிபதிகள், சில எம்.பி.க்கள், அரசியல் விமர்சகர்களிடம் சொன்னேன். அவர்கள் 3 விஷயங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சி பதவிக்காகத்தானே வருவார்கள், அதுவே இல்லை என்கிறீர்களே என்றனர். பதவிக்காக வருபவர்கள் வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன்.

50 வயதுக்கு மேல்தான் என் மன்றத்தில் நிர்வாகிகள் இருப்பதாகக் கூறினர். நானே பதவி வேண்டாம் என சொல்கிறேன், நீங்கள் பதவியை விடுங்கள் என்று சொன்னால் விட வேண்டும்.

மூன்றாவது திட்டத்தை யாரும் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்பதை இளைஞர்கள் சிலர் மட்டுமே ஒப்புக்கொண்டனர். இந்த முடிவைக் கைவிடுமாறு பலரும் கூறினர்.

அழகு பார்ப்பது என்பது அரசியலில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர் என அவர்களை அழகு பார்க்க வேண்டும். இது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தலைமை சொல்வதை யார் கேட்கிறார்களோ அவன்தான் தொண்டன். முதல்வர் பதவி வேண்டாம் என்பதைத் தியாகம் செய்வதாக நினைக்கின்றனர். அரசியல் வியூகம் என நினைக்கின்றனர்".

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

முன்னதாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசினோம். எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என ரஜினி பேட்டியளித்தார். இந்நிலையில் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்பதை நிர்வாகிகள் ஏற்காததுதான் ஏமாற்றம் அளித்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x