Published : 11 Mar 2020 08:12 PM
Last Updated : 11 Mar 2020 08:12 PM

மதுரவாயலில் சோகம்: உயிரிழந்த மகனின் உடலை கட்டிப்பிடித்தப்படி உயிரிழந்த தாய்

மதுரவாயலில் மாரடைப்பால் உயிரிழந்த மகனின் சடலத்தை கட்டிப்பிடித்தப்படி அழுத தாயும் திடீரென உயிரிழந்தார். இது அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‌‌சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்தவர் தாமஸ்(45). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் தூங்கச் சென்ற தாமஸுக்கு இரவு 1 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவரது உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குக்காக உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

தாமஸ் திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்ததை அறிந்து அவரது தாயார் காஞ்சனா இரவு முழுதும் அழுதபடி இருந்தார். காலையிலும் மகன்‌ சடலம் அருகே அழுதபடி அமர்ந்திருந்தார். இந்நிலையில் அழுதபடி இருந்த தாய் காஞ்சனா திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய முயற்சி செய்தனர். ஆனால் அவர் கண் விழிக்கவே இல்லை. அவரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

மகன்மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த காஞ்சனா மகன் மரணத்தை தாங்க முடியாமல் அவரும் உயிரிழந்தது கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x