Last Updated : 07 Mar, 2020 02:28 PM

 

Published : 07 Mar 2020 02:28 PM
Last Updated : 07 Mar 2020 02:28 PM

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

தென்காசியில் பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5.40 மணிக்குமேல் 6.20 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.

முதலில், காலை 8.45 மணிக்கு சுவாமி தேர் முதலில் இழுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ளள தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த தேர் காலை 9.30 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர், உலகம்மன் தேர் காலை 9.45 மணிக்கு இழுக்கப்பட்டது. நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் காலை 10.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட விழாவில் கலந்துகொண்டனர். பின்னர், மதியம் 12.30 மணிக்கு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x