Published : 07 Mar 2020 10:55 AM
Last Updated : 07 Mar 2020 10:55 AM

க.அன்பழகன் தத்துவமாக வாழ்ந்துகொண்டே இருப்பார்: வைரமுத்து புகழாஞ்சலி

அன்பழகன் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி | படம்: எல்.சீனிவாசன்

சென்னை

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தத்துவமாக வாழ்ந்துகொண்டே இருப்பார் என, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் (98) மறைந்தார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், க.அன்பழகனின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, "மறைந்த முதல்வர் கருணாநிதியுடன் 75 ஆண்டுகள் நட்பு பாராட்டியவர் க.அன்பழகன். இப்படிப்பட்ட வாழ்க்கை வேறு எவருக்கும் வாய்த்திருக்காது.

க.அன்பழகனின் வாழ்வில் இருந்து இந்த பொதுச் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பெரும் பண்பு உண்டு. தான் ஒரு அமைச்சர் என்று ஒருநாளும் அவர் தன் தலையில் கிரீடத்தை ஏற்றிக்கொண்டதில்லை. தோல்வி வந்தபோது துவண்டதும் இல்லை. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகக் கருதும் பக்குவம் கொண்டவர்.

அவருடைய வாழ்க்கையே ஒரு பெரிய செய்தி. அவர் தொட்டது பகுத்தறிவு. நிறைந்ததும் பகுத்தறிவுதான். அவருடைய தொடக்கப் புள்ளி இனமானம். முற்றுப்புள்ளியும் இனமானம்தான். அவரது வாழ்வே திராவிட இயக்கத்திற்குப் பெரும் பாடமாக இருக்கிறது. திமுகவை விட்டு எங்கும் செல்லாதவர், தடம் மாறாதவர் எனப் பலரும் அவரை சொல்வர். கருணாநிதி ஒருமுறை சொன்னார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட கட்சியை விட்டு க.அன்பழகன் எங்கே செல்வார் எனச் சொன்னார்.

எலும்பும் சதையும் கொண்ட உடல் அழுகிவிடும். ஆனால், கொள்கை, லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் அழிவதில்லை. க.அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார். அவர் தத்துவமாக வாழ்ந்துகொண்டே இருப்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தனது அரசியல் ஆசானை இழந்து வாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தங்கள் பொதுச் செயலாளரை இழந்து வாடும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என வைரமுத்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x