Last Updated : 11 Mar, 2014 12:00 AM

 

Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி?- திமுக மூத்த நிர்வாகிகள் ஏமாற்றம்

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு போராடிய மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் ஆகியோரின் வாரிசுகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இம்முறை திமுக மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் மனு செய்திருந்தனர்.

அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட கருப்பசாமிபாண்டியனின் மகன் வி.கே.பி. சங்கரும், ஆவுடையப்பனின் மகன் ஆ. பிரபாகரனும் மனு செய்திருந்தனர். இதுபோல் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திண்டுக்கல் ஐ. பெரியசாமி மகன் செந்தில், தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகன், பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி, திருவண்ணாமலை எ.வ. வேலு மகன் கம்பன், ராமநாதபுரம் சுப. தங்கவேலன் மகன் சுப.த. சம்பத், பொள்ளாச்சி கண்ணப்பன் மகன் முத்து உள்ளிட்டோரும் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தனர்.

இதில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அம் மாவட்ட திமுக செயலர் பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருநெல்வேலி தொகுதிக்கு வாய்ப்பு கேட்டிருந்த வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அவர்களைப்போல் சீட் கேட்டிருந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்களான முன்னாள் மாநகராட்சி துணை மேயர் கா. முத்துராமலிங்கம், திருநெல்வேலி மாநகர திமுக பொறுப்பாளர் அப்துல்வகாப், மாவட்ட இளைஞரணி செயலர் சுரேஷ்ஸ மாநகர இளைஞரணி செயலர் ஜார்ஜ் கோசல் என்று பலருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் சென்னையில் தங்கியிருக்கும் தொழிலதிபர் தேவதாச சுந்தரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கருப்பசாமி பாண்டியன், ஆவுடையப்பன் வாரிசுகளில் யாருக்கேனும் வாய்ப்பு அளித்தாலும் அது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்பதும், கோஷ்டி பூசல் என்ற எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவதாக ஆகிவிடும் என்பதும் கட்சி தலைமைக்கு தெரிந்திருக்கிறது. இதனாலேயே வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று அக் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கட்சியில் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையை மட்டும் பெற்றுள்ள தேவதாச சுந்தரம் கட்சிக்கு நிதி பங்களிப்பை அளித்ததை மிகப்பெரும் தகுதியாக கொண்டு அவருக்கு நன்றிக்கடனாக தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் உள்ளூர் திமுக பிரமுகர்களின் ஒத்துழைப்பை பெறுவதே தேவதாச சுந்தரத்தின் முதல் வேலையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x