Published : 04 Mar 2020 05:05 PM
Last Updated : 04 Mar 2020 05:05 PM

திருவேற்காடு கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவு வரி: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை 

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் டெண்டர் விட்டார். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவேற்காடு மாரியம்மன் கோயில் சென்னையின் பிரதான கோயில்களில் ஒன்று. சென்னையிலிருந்து பெரும்பாலான பொதுமக்கள் இக்கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். திருவேற்காடு கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தோடு, நுழைவுக் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

நகராட்சி எல்லைக்குள் நுழைவுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், திருவேற்காடு கோயிலுக்குச் செல்வதற்கான வாகன நுழைவுக் கட்டணத்தை மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான டெண்டரையும் கடந்த மாதம் 13-ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார

நுழைவுக் கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வழக்குத் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x