Published : 03 Mar 2020 12:54 PM
Last Updated : 03 Mar 2020 12:54 PM

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கும் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. பின், எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வேலூரில் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், தேர்வில் கலந்துகொண்டவர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (மார்ச் 3) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஒரே தேர்வு மையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றார்கள் என்றும் எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்த 3 பேர் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு எனவும், இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேர்வு முறைகேடு குறித்து ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு எனவும், தனி நீதிபயின் இந்த உத்தரவு தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தமிழக அரசின் மேல்முறையீட்டை அனுமதித்தத் தலைமை நீதிபதி, தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x