Published : 01 Mar 2020 09:20 AM
Last Updated : 01 Mar 2020 09:20 AM

ராமநாதபுரம், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

விருதுநகரில் நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பதையொட்டி மேடை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய காவலர்.

ராமநாதபுரம்/விருதுநகர்

ராமநாதபுரம், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், உதகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே ரூ.345 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இங்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா அம்மா பூங்கா அருகே உள்ள திடலில் இன்று (மார்ச் 1) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் மையம், பரமக்குடியில் ரூ.1.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்-சேய் நல சிகிச்சை மையம், கீழத்தூவலில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 5 புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ரூ.833 கோடி நலத்திட்ட உதவி

இதைத் தொடர்ந்து விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.380 கோடியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.833 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார். இவ்விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

விழாவில் ரூ.234 கோடி மதிப்பில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும், ரூ.2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், ரூ.1.94 கோடியில் கட்டப்பட்டு உள்ள சிவகாசி பேருந்து நிலையம் ஆகியற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

ரூ.1.63 கோடியில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.444 கோடியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

ரூ.3.05 கோடியில் வத்திராயிருப்பில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டும் பணி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் திருச்சுழி, வீரசோழனில் ரூ.1 கோடியில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 22,350 பேருக்கு மொத்தம் ரூ.833 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x