Last Updated : 13 Aug, 2015 07:27 PM

 

Published : 13 Aug 2015 07:27 PM
Last Updated : 13 Aug 2015 07:27 PM

இடது கை பழக்கமுள்ளவர்கள் விவேக திறன் கொண்டவராக இருப்பர்: இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்

பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின் போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள்வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில்கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப் பது, தற்காலத்தில் கணனியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள். இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் வித்யாசங்கர் கூறும்போது, “இடது கை பழக்கம் பிறப்பிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. பெரு மூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மைய விழையம் (மெடுல்லா ஆப்லங்கட்டா) என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. பெரும்பாலானோருக்கு இடதுபக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலதுபக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஒரு சிலருக்கு வலதுபக்க அரைக்கோளம் மேலோங்கி இருப்பதால் இடதுபக்க பழக்கம் ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சித்தால் அவர்களது கை எழுத்து சிதைவதுடன், பின்னாளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்” என்றார்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள்வதிலும், விளையாட்டுத்துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள், விவாதத்திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x