Last Updated : 28 Feb, 2020 01:16 PM

 

Published : 28 Feb 2020 01:16 PM
Last Updated : 28 Feb 2020 01:16 PM

புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மாயமான வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

மதுரை

புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மாயமான வழக்கானது, போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது 17 வயது மகன் சண்முகப்பிரியன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மகனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

சண்முகபிரியனை கோவையில் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். அங்கு சென்றும் விசாரித்தோம். இருப்பினும் என் மகனை பற்றி தகவல் கிடைக்கவில்லை. என் மகனை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மகன் மாயமான வழக்கில் புதுக்கோட்டை போலீஸார் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வருவதாகக் கூறப்பட்டது.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x