Last Updated : 19 Feb, 2020 08:32 PM

 

Published : 19 Feb 2020 08:32 PM
Last Updated : 19 Feb 2020 08:32 PM

எஸ்பிஐ-யின் 'சம்பள பேக்கேஜ்' திட்டம் தெரியுமா?- அரசு ஊழியர்கள் போல் கார்ப்ரேட்  நிறுவன ஊழியர்களும் பயன்பெறலாம்

மதுரை

பாரத ஸ்டேட் வங்கியின் 'சம்பள பேக்கேஜ்' திட்டத்தால் அரசு ஊழியர்கள் பெருமளவில் பயன்பெறுவதாகவும் அதேபோல் இத்திட்டம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என வங்கித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட பிற தேசிய வங்கிகளில் சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசுத் துறையினர், ஆசிரியர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு பல லட்ச ரூபாய் கிடைக்க, சம்பள ‘பேக்கேஜ்’ திட்டம் உதவிகரமாக இருக்கிறது.

பொதுவாக அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்களான காவல்துறை, தீயணைப்பு, வனத்துறை ராணுவத்தினர் எனப் பெரும்பாலான அரசுத்துறைகளில் பணிபுரிவோரின் சம்பளக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் தான் பராமரிக்கப்படுகிறது.

இது தவிர, பிற தேசிய வங்கிகளிலும் அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் சம்பளக் கணக்கு உள்ளது. இவற்றின் வழியாகவே மாதந் தோறும் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் சம்பளக் கணக்கு எச்டிஎப்சி போன்ற தனியார் வங்கிகளில் பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய வங்கிகளில் சம்பளக் கணக்கு வைத்து இருக்கும் அரசுத்துறை, சீருடைப் பணியாளர்களுக்கு சம்பளக் ‘பேக்கேஜ் ’ என்ற திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பணியின்போது, எதிர்பாராத விதமாக விபத்து, இயற்கைச் சீற்றம், போர் நிகழ்வு போன்ற சம்பவங்களில் உயிரிழக்க நேரிடும் அரசுத் துறையினர், சீருடை பணியாளர்களின் சம்பள விகிதாச்சார அடிப்படையில் வழக்கமான தொகையைவிட கூடுதல் தொகை பாதிக்கப்படும் குடும்ப வாரிசுகளுக்கு கிடைக்க , சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கின்றன.

காவல்துறை உட்பட பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் எவ்வளவு சம்பள விகிதமாக இருந்தாலும் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது பயனாளிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை ரீதியாக பணப்பலன் கிடைக்க, தாமதம் ஏற்பட்டாலும், சம்பள ‘பேக்கேஜ்’ திட்டம் மூலம் குறிப்பிட்ட தொகைக்கான பணப்பலன் உடனடியாக வழங்கப்படுகிறது.

இது குறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர், "இத்திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைமுறையில் இருந்தாலும், பலருக்கும் தெரியவில்லை. சம்பள ‘பேக்கேஜ்’ திட்டம் பிற தேசிய வங்கியிலும், ஆக்சிஸ் உள்ளிட்ட சில தனியார் வங்கிகளிலும் உள்ளன. அந்தந்த வங்கி வலைதளத்தில் விவரம் அறியலாம்.

குறிப்பாக எஸ்பிஐயில் அரசுத்துறை, நிறுவனம் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனம், மத்திய, மாநில அரசு, பாதுகாப்பு துறை, ரயில்வே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை, இந்திய கடற்கரை மற்றும் பாதுகாப்புத்துறை பென்ஷனர்களுக்கான சம்பள ‘பேக்கேஜ்’ திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

பாதுகாப்பு, காவல், தீயணைப்பு உள்ளிட்ட சீருடைய பணியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், விபத்து, போர் , துப்பாக்கிச் சூட்டு போன்ற சம்பவங்களில் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.

பிற அரசுத் துறையில் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கினால் ரூ.1 லட்சமும், ரூ. 50 ஆயிரம் சம்பளத்திற்கு ரூ.5 லட்சமும், ரூ. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சமபளம் பெற்றால் ரூ. 15 லட்சமும் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றவர்களுக்கு ரூ. 20 லட்சமும் ‘பேக்கேஜ்’ திட்டத்தில் பணப்பலன் கிடைக்கும்.

வாரிசுதாரர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும். வாரிசுதாரர்கள் இல்லாத சூழலில் தாமதம் ஏற்படலாம். எங்களை பொறுத்தவரை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x