

படப்பிடிப்பில் இருந்து அவரை அழைத்து வந்து சோதனை செய்தமைக்கு நடிகர் விஜய் வருமானவரித்துறையினர் மீது வழக்குத் தொடரலாம். ஒன்றுமில்லை என்றால் அச்சப்படத் தேவையில்லை என பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் கொண்டாடப்பட்டு , ரூ.300 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. அதையொட்டி திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. .
விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமானவரித்துறை வாக்குமூலம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்த விஜயை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விஜயிடம் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து சென்னை விமானநிலையத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " ஒன்றும் இல்லை என்றால் விஜய் எதற்காகப் அச்சப்பட வேண்டும். படப்பிடிப்பில் இருந்து அவரை வருமானவரித்துறை அதிகாரிகள்அழைத்து வந்தது தவறாகத் தெரிந்தால், வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வழக்குத் தொடரலாம்" எனத் தெரிவித்தார்
தவறவிடாதீர்..