Last Updated : 07 Feb, 2020 04:49 PM

 

Published : 07 Feb 2020 04:49 PM
Last Updated : 07 Feb 2020 04:49 PM

சாதிய வன்மத்தால் கொலையானவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாதிய வன்மத்தால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நாவலடையூரைச் சேர்ந்த கே.ருக்மணி (72). இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் ஆதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள். என் கணவர் 2010-ல் இறந்தார். எங்களுக்கு 4 மகன்கள். இரண்டாவது மகன் ஆறுமுகராஜா (43) ஊரில் விவசாயம் பார்த்து வந்தார். விவசாய சங்கம், கூட்டுறவு சங்கத்திலும் பொறுப்பில் இருந்தார். வெள்ளூரைச் சேர்ந்த காசி உட்பட பலர் சாதி ரீதியாக எங்கள் குடும்பத்துக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தனர்.

கடந்த 22.4.2013-ல் காசி உட்பட பலர் ஆயுதங்களுடன் எங்கள் வீட்டிற்கு புகுந்து ஆறுமுகராஜாவை கொலை செய்ய முயன்றனர்.
இது தொடர்பாக போலீஸில் புகார் செய்ததால் மறுநாள் எங்கள் தோட்டம் மற்றும் வீட்டை சேதப்படுத்தினர்.

இதையடுத்து எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து அமைதி ஏற்படுத்தவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

அதன்படி போலீஸார் எங்களை மட்டும் சம்மன் அனுப்பி விசாரித்தனர். எதிர் தரப்பினரை விசாரிக்கவில்லை. எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கவில்லை.

உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் நிறைவேற்றாததால் ஆறுமுகராஜா, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் அருகே 2.4.2015-ல் காசி உள்பட பலரால் கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டம் போலீஸார் கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவே என் மகன் கொலைக்கு காரணம். எனவே ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரருக்கு 6 வாரத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x