Published : 06 Feb 2020 09:57 PM
Last Updated : 06 Feb 2020 09:57 PM

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: துரைமுருகன் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணையை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமார் சரண்டரில் மறைந்துள்ள மர்மங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயக்குமார் இன்றைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திடீரென்று சரண்டர் ஆகியிருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

சிபிசிஐடி போலீஸார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் சென்னையிலேயே அவர் சரண்டர் ஆகியிருக்கிறார் என்றால் “அவரைத் தேடுகிறோம்”, “விரைவில் பிடிபடுவார்” என்பதெல்லாம் சிபிசிஐடி போலீஸார் “எந்த உயரதிகாரியை”, “எந்த அமைச்சரை”, “எந்த உயர்மட்டத்தை” தப்புவிக்க விட பரப்பப்பட்ட செய்திகளோ? என்ற கேள்வி எழுகிறது.

கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் இதுவரை காவல் உதவியாளர் சித்தாண்டி 22 பேருக்கும், இன்னொரு காவலர் பூபதி 5 பேருக்கும் முறைகேடு செய்து வேலை வாங்கிக் கொடுத்திருப்பதும், இருவரும் சேர்ந்து 2.55 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றிருப்பதும் வாக்குமூலங்களாக பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை பேருக்கு இது மாதிரி முறைகேடு மூலம் வேலை? இன்னும் எத்தனை கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருக்கிறது? இவ்வளவுக்குப் பிறகும் டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் முதல் - உயரதிகாரிகள் வரை ஏன் எவரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்பதெல்லாம் புதிராகவே இருக்கிறது.

கீழ்மட்டத்தில் ஏதோ தவறுகள் நடந்துவிட்டது என்று டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட முதலைகளைத் தப்பிக்கவிட அதிமுக அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது. ஒரு இமாலய முறைகேடு பற்றி கிடைக்கும் தகவல்களைப் பெற்று விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று கூற வேண்டிய டிஎன்பிஎஸ்சி-யின் துறை அமைச்சர் ஜெயக்குமார், “வதந்தி பரப்புவர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பும்” என்று காவல்துறைக்கே அவர்தான் துறை அமைச்சர் என்பது போல் பேட்டியளிப்பது “மிகப்பெரிய தேர்வு ஊழலை” மூடி மறைக்கும் சதித் திட்டத்திற்கு துணை போகிறார் என்றே தோன்றுகிறது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி - ஒரு பாரம்பரியமிக்க தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் - இது குறித்து முதல்வர் எதுவுமே கூறாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே சிபிசிஐடி தேடிக் கொண்டிருந்த இடைத்தரகரும் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமார் எப்படி சென்னையின் இதயத்தில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்?

அவருக்கு இதுநாள் வரை அடைக்கலம் கொடுத்து சரண்டர் அடைய வைத்தது யார்? இத்தனை முறைகேடுகளுக்குப் பிறகும் - நேர்மையானவர் என்று கருதப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஏன் வாய் திறக்காமல் அமைதி காக்கிறார்? அவரைச் சுயமாகச் செயல்பட விடாமல் கட்டிப் போட்டு வைத்திருப்பது யார்? எல்லாம் பல்வேறு ஊழல் முறைகேட்டுச் சேற்றில் மூழ்கி கிடக்கும் அதிமுக அரசின் “புதிய தர்பாராக” காட்சியளிக்கிறது.

ஆகவே, இனியும் டிஎன்பிஎஸ்சியின் இந்தத் தேர்வு முறைகேட்டை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் சிபிசிஐடி விசாரிப்பதில் எந்தப் பயனும் இருக்காது. நேர்மையாக - இரவு பகலாக படித்து தேர்வு எழுதி - ஏமாற்றம் அடைந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் - டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணையை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமார் சரண்டரில் மறைந்துள்ள மர்மங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்''.

இவ்வாறு துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x