Published : 04 Aug 2015 11:15 AM
Last Updated : 04 Aug 2015 11:15 AM

ஜவ்வாது மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜவ்வாது மலையில், மேல்பட்டு அடுத்த பெரு முட்டம் என்ற சிறிய கிராமத்தில் நூற்றுக்கணக்கான “கல் திட்டை கள்” சிதைக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வசிக்கும் தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, “ஜவ்வாது மலையில் பண்டைய மனிதர்களின் தொன்மையான வாழ்க்கை முறை பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. பெருமுட்டம் மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் திட்டைகள் உள்ளது தெரிய வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இதுபோன்ற கல் திட்டைகளை பண்டைய மனிதர்கள் உருவாக்கி உள்ளனர். அதன் காலம், கி.மு.1,000 ஆண்டு களுக்கு முந்தையது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள ‘பாண்டவர் குட்டை’ என்ற இடத்தில் 40-க் கும் மேற்பட்ட கல்திட்டைகளும், மலையடிவாரத்தில் 50-க்கும் மேற் பட்ட கல்திட்டைகளும், ஜொனை மடுவு என்ற பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கல்திட்டைகளும் காணப்படுகின்றன. அவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. 6 அடி நீளமும், 4 அடி அகலமும் உள்ள பெரிய கல் திட்டைகள் மற்றும் 2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள சிறிய கல் திட்டைகள் உள்ளன. அதனை குள்ளர் குகைகள் என்று மக்கள் அழைக்கின்றனர்.

பூமிக்கு மேலே உள்ள பாறையின் மீது பல கல்திட்டைகளும், பூமிக்கு கீழே பலகை கற்களை கொண்டு கல்லறை வடிவிலும் கல்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லறையை சுற்றி உருண்டை கற்களை அடுக்கி கல் திட்டைகளை உருவாக்கி உள்ளனர். பாறைகளுக்கு தீயிட்டு இயற்கையான முறையில் பாறைகளை பிரித்துள்ளனர்.

கல்திட்டைகள் அதிகம் உள்ள பகுதியில் வாழ்ந்த குள்ள மனிதர்கள், அவற்றை அழித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும், பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இந்த பகுதியில் தங்கி சென்றதாக மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். அதனாலேயே பாண்டவர் குட்டை என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

ஜொனைமடுவு என்ற இடத்தில் கற்கருவிகளை உருவாக்க பாறையில் கல்லை கொண்டு, பண்டைய மனிதர்கள் தேய்த்ததால் ஏற்பட்ட பள்ளங்களை காணலாம். வரலாற்று சிறப்புமிக்க கல் திட்டைகளில் உள்ள கற்களை, வீடு கட்டும் பணிக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய பணியின்போதும் இவை அழிக்கப்படுகின்றன. இதை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x