Published : 31 Jan 2020 10:17 PM
Last Updated : 31 Jan 2020 10:17 PM
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், கணேஷ்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி 2017 அக்டோபரில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரது மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகக் கூடும் என்பதால், முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த வழக்குத் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த 2019-ம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாக தன்னைக் கைது செய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் வழக்கை பிப்ரவரி 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT