Published : 28 Jan 2020 07:35 AM
Last Updated : 28 Jan 2020 07:35 AM

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றுக்குள் அரை கிலோ முடி- அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்டுகள் துகள்கள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, திட உணவுகளை உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். திரவ உணவை மட்டுமே உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ததில் திட வடிவில் கட்டி இருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக அக்கட்டி அகற்றப்பட்டு, தற்போது சிறுமி நலமாக உள்ளார்.

இதுதொடர்பாக குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமியின் வயிற்றில் தலைமுடி, ஷாம்பு பாக்கெட் துகள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தோம்.

பின்னர், மருத்துவக் குழுவினர் சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் 500 கிராம் எடையில் கட்டிபோல் இருந்த தலைமுடியை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

சிறுமியின் தாய்மாமா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அந்த அதிர்ச்சியில் சிறுமி கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதுகுறித்து பெற்றோருக்கு தெரியவில்லை. இதன்காரணமாக தனது தலைமுடியை பிய்த்து அவ்வப்போது வாய்க்குள் போட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு இந்தச் செயல் நடந்திருக்கும் என கருதுகிறோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுமி நலமாக உள்ளார்.

சிறுவர்களையும் பாதிக்கும்

அவருக்கு உளவியல் ஆலோசனை தரப்படுகிறது. மன அழுத்தம் பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் என்றில்லை. சிறுவர்களும் அதனால் பாதிக்கப்படலாம். சிறுவர்களிடம் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x