Last Updated : 23 Jan, 2020 11:13 AM

 

Published : 23 Jan 2020 11:13 AM
Last Updated : 23 Jan 2020 11:13 AM

ஆதிச்சநல்லூர், சிவகளை தொல்லியல் ஆய்வுக்கு அதிநவீன உபகரணங்கள்: சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஆத்தூர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 50-வது கல்விசார் நிலைக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய துணைவேந்தர் கே. பிச்சுமணி இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது: பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் அதிநவீன உபகரணங்களை வாங்குவதற்காக தமிழக அரசு ரூ.20 கோடியை வழங்கியிருக்கிறது. அதில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்கு தேவையான நவீன உபகணரங்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர பல்வேறு துறைகளில் வாங்க வேண்டிய நவீன உபகரணங்கள் குறித்தும் பல்கலைக்கழகம் இறுதி செய்திருக்கிறது. அடுத்த கல்விசார் நிலைக்குழு கூட்டத்துக்குமுன் இந்த உபகரணங்கள் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும்.

இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அடுத்த கட்டத்துக்கு செல்லும். பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு முன்னோட்டமாக ஆதிச்சநல்லூர், சிவகளை, ஆத்தூர் பகுதிகளில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளும் இணைந்து அகழாய்வுகளையும், தொல்லியல் ஆய்வுகளையும் மேற்கொள்ள இருக்கின்றன.

அங்கிருந்து கிடைக்கும் மிகப்பழமையான பொருட்களை சேகரித்து பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படவுள்ள தொல்லியல் மையம் மற்றும் அருங்காட்சியகத்தில் வைக்கவுள்ளோம். இதன்மூலம் வருங்கால சந்ததியினருக்கு நமது பண்டைய பண்பாடு, கலாச்சாரத்தின் தொன்மை குறித்து தெரியவரும்.

பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஏதுவாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.

பள்ளி கல்வித்துறையில் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் உயர்தர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்ற வகையிலும், ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களையும் மாற்றி அமைக்கப்படும்.

இதற்காக கல்விசார் நிலைக்குழுவில் ஐஐடி, சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து 3 நிபுணர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பதிவாளர் எஸ். சந்தோஷ்பாபு மற்றும் கல்விசார் நிலைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x