Published : 22 Jan 2020 05:51 PM
Last Updated : 22 Jan 2020 05:51 PM

பெரியகோயில் குடமுழுக்கு: சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிப்பது நியாயமற்றது; மார்க்சிஸ்ட்

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.22) வெளியிட்ட அறிக்கையில், "மாநிலங்களில் ஆட்சி மொழி, உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழி, ஆலயங்களில் வழிபாட்டு மொழி மற்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழி இருக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாகும்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மேற்கண்ட அனைத்திலும் தமிழ் மொழியே இடம் பெற வேண்டும். இந்நிலையில் தஞ்சையில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ள பிரகதீஸ்வரர் ஆலயக் குடமுழுக்கினை தமிழில் நடத்துவதா, சமஸ்கிருதத்தில் நடத்துவதா என்கிற கேள்வியே பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு உள்பட அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டு மொழியாக தமிழை இடம் பெறச் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் அளித்துள்ள பதிலுரையில், இதற்கு முன்பு தமிழ் ஆகமங்களின் படியே ஆலய வழிபாடு நடைபெற்றபோதும், குடமுழுக்கு சமஸ்கிருத மொழியிலேயே நடைபெற்றது என்றும், தற்போதும் அதே நடைமுறையே பின்பற்றப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அதிகாரத்தில் உள்ள நிர்வாக மொழி மற்றும் வழக்காடு மொழிகளில் தமிழ் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தும் தமிழக அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள குடமுழுக்கு பிரச்சினையில் மட்டும் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிப்பது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும்.

இவ்வழக்கு விசாரணை மீண்டும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு, ஏற்கெனவே சமர்ப்பித்த ஆட்சேபனைக்குரிய வாக்குமூலத்தை திரும்பப் பெற்று பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு தமிழில் நடைபெறும் என பதிலுரை தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

வரலாற்றுக் காலந்தொட்டு தமிழின் மேன்மையைப் புறந்தள்ளி சமஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை என்ற மேலாதிக்கம் நீடித்து வரும் நிலையினை மாற்றிட வேண்டும். உலகின் மூத்த மொழியான தமிழுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடவும் தமிழில் குடமுழுக்கு நடத்துவது அவசியமாகும். கடந்த காலத்தில் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட்டுள்ளது. எனவே, பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் இந்த நடைமுறை தொடங்கப்பட வேண்டும்.

மேலும், மரபு, பண்டைய பழக்க வழக்கம் என்ற பெயரில் காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளைப் பின்பற்றுவது ஏற்க இயலாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டுமென சட்டங்கள் இயற்றப்பட்டு நீதிமன்றங்களும் இசைவு தெரிவித்துள்ள நிலையில், கேரள இடதுஜனநாயக அரசு அதை நடத்திக் காட்டியுள்ள பின்னணியில் தமிழகத்தில் இச்சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டிய நிலையில், அதற்கு முதல்படியாக தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x