Published : 17 Jan 2020 11:10 AM
Last Updated : 17 Jan 2020 11:10 AM

எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மலரஞ்சலில் செலுத்தினர்.

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103-வது பிறந்த நாள் விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அருகிலிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக காலை 9 மணிக்கு முதல்வர் தனது இல்லத்தில், எம்.ஜி.ஆர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் அங்குள்ள கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து அவரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக அலுவலகத்தைத் தொடர்ந்து கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அரசு சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்குச் செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x