Published : 11 Jan 2020 07:37 AM
Last Updated : 11 Jan 2020 07:37 AM

இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமையை பரிசீலிக்க வேண்டும்: வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் வலியுறுத்தல்

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தமிழர் திருநாள் விழாவில் பேசுகிறார் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன். உடன் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
வேலூர் ஊரீசு கல்லூரி காப்அரங்கில் வேலூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை நேற்று நடந்தன. விழாவில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்
கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. போரின்போது இந்தியா வந்தவர்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, அவர்கள் இலங்கை திரும்பும்போது கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் அவர்கள் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும். போர் சமயங்களில் இலங்கையில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன. அங்கு, இன்னும் ராணுவமுகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அதேசமயம், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் இந்திய அரசு பரிசீலனைசெய்ய வேண்டும். புதிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்கு கிடைக்கவில்லை. அதனால், அவர் தனது அரசியல் வாழ்க்கையை சிங்கள, பவுத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. போருக்கு பிறகு இன்னமும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தற்போது மூன்றாம் தலைமுறைகளாக உள்ள இலங்கைத் தமிழர்களும் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். அவ்வாறு தமிழர்கள் பலம் அதிகரிக்கும்போது தேவையான வளமான வாழ்க்கை சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் அந்த கொலையில் நேரடியாக ஈடுபடவில்லை. அதனால், அவர்களை விடுதலை செய்வதில் தவறில்லை. அவர்கள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் இந்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x