Published : 07 Jan 2020 04:43 PM
Last Updated : 07 Jan 2020 04:43 PM

நகர்புற உள்ளாட்சித்தேர்தல்; தமிழக தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தாத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அவரது மனுவில், “ உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் செய்யாமல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முழுமையாக கடைபிடித்த பின்னரே தேர்தலை அறிவிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கு அனைத்து சட்டப்பூர்வ பணிகளை முடித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளாட்சியில் ஒரு பகுதிக்கு மட்டுமே தேர்தல் நடத்தியுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, தீர்ப்பை அவமதிக்கும் செயல். மேலும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை முழுமையாக பின்பற்றாதது நீதிமன்ற அவமதிப்பாகும் ”. என மனுவில் ஜெய் சுகின் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x